திருச்சிற்றம்பலம்

Sivapuranam, Thiruvasagam - Thiruchitrambalam Tamil song lyrics by Maanikkavaasagar.


சிவபுராணம் திருச்சிற்றம்பலம் பாடல் வரிகளை காலையிலும் மாலையிலும் பக்தியுடன் பாராயணம் செய்தால் மனக்கவலைகள் நீங்கி ஈசன் அருளால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது,
திருவாசகம் - சிவபுராணம் பாடல் வரிகள்


நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்!!!
தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!


திருவாசகம் எழுதிய சிவ பெருமான்

தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.


மாணிக்கவாசகரிடம் தாங்கள் எழுதிய ‘திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகரும் 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் அவற்றை எழுதிக் கொண்டார். பின்பு திருவாசகம் எழுதப்பட்ட அத்தனை ஓலைச் சுவடிகளையும் நடராசர் சன்னிதி முன்பு வைத்து விட்டு பெருமான் மறைந்து விட்டார்.


மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னிதியில் கிடந்த நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போனார்கள். ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் ‘மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்’ எழுதியது என கையொப்பம் இடப்பட்டிருந்ததை பார்த்து மீண்டும் திகைத்து போனார்கள். உடனே மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடத்துக்கு சென்றனர். அங்கு மாணிக்கவாசகரிடம் நடந்த சம்பவத்தை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.


அவரும் ஓலைச்சுவடிகளில் உள்ள ஒவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். கடைசியில் பெருமானின் கையொப்பத்தை கண்டு பிரமித்தவராய் ‘‘ஆம் அடியேன் சொல்ல எழுதப்பட்டது தான்’’ என்றார். தன்னை நாடி வந்தது பெருமான்தான் என்பதை நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.


தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினார்கள். மாணிக்கவாசகர், புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராஜப் பெருமானைக் காட்டி ‘‘இந்த பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள்’’ என்றார். அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார். இந்த திருவாசகம் சிவபுராணம் என்றும் அழைக்கப் படுகிறது.


திருவாசகத்தின் சிறப்புகள்

* நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகம் தொடங்குகிறது.

* முதல் பதிகத்தில் 6 இடங்களில் ‘வாழ்க’ என முடியும். 2-வது பதிகத்தில் 5 இடங்களில் ‘வெல்க’ என முடியும்.

* 3-வது பதிகத்தில் 8 இடங்களில் ‘போற்றி’ என முடியும்.

* இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

* 32-வது வரியில் ‘மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்’ என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

* திருவாசகத்தின் 18-வது வரியான "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’"என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

* "புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.


சிவதரிசன பலன்

காலை - பிணி போக்கும்

மாலை - பாவம் போக்கும்

நண்பகல் - தனம் பெருகும்

அர்த்தசாமம் - வீடுபேறு அளிக்கும். 


புண்ணியம் / முக்தி

கமலையில் (திருவாரூரில்) பிறந்தால் முக்தி / புண்ணியம்

சிதம்பரத்தை (நடராஜரை) தரிசித்தால் முக்தி / புண்ணியம்

திருவண்ணாமலையை (அண்ணாமலையை) நினைத்தாலே முக்தி / புண்ணியம்

காசியில் இறந்தால் முக்தி / புண்ணியம்.


பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பெறுகின்றன. இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ அவற்றுள் சிலவற்றைக் கொண்டோ உருவாகி இருக்கும்.


பஞ்சபூதங்களுக்கு உரிய 5 சிவத்தலங்கள்: